Friday, April 27, 2007

குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி!

வெள்ளி 27-04-2007

குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம்.

இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார்.

அங்கு போன பின்னர் தனது அக்கா உண்ணாமலையையும் துணைக்கு வைத்துக் கொண்டார் ஆதிலட்சுமி. சில நாட்கள் அமைதியாக இருந்து வந்த சீனிவாசன் மறுபடியும் குடிக்க ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பாகிப் போன ஆதிலட்சுமி, இதற்கு மேலும் சீனிவாசனிடம் அடி உதை பட்டு அவஸ்தைப்பட விரும்பவில்லை. இதையடுத்து தனது அக்காவுடன் ஆலோசித்தார். அப்போது சீனிவாசனைக் கொன்று விடுவது என இருவரும் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார் சீனிவாசன். வழக்கம் போல ஆதிலட்சுமியை அடித்து விட்டு தூங்கி விட்டார். நள்ளிரவில் கிரைண்டரில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அதை வைத்து சீனிவாசனை சரமாரியாக அடித்தனர். இதில் தலைநசுங்கி இறந்தார்.

பின்னர் உடலை சாக்குப் பையில் வைத்து கட்டினர். காலையில், குடிபோதையில் விஷத்தை சாப்பிட்டு சீனிவாசன் இறந்து விட்டதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

ஆனால் சீனிவாசனின் தாயாருக்குத் தகவல் தெரிந்து அவர் ஓடி வந்தார். மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து விசாரித்தபோது நடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஆதிலட்சுமி, உண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். அக்காவுடன் சேர்ந்து கிரைண்டர் கல்லால் கணவரைக் கொலை செய்த ஆதிலட்சுமியால் அப்பகுதி பரபரப்பாகிப் போனது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home