Saturday, March 31, 2007

சிவாஜி பாட்டு லீக்: ரஹ்மான் மீது ஷங்கர் டவுட்?

சனி 31-03-2007

சிவாஜி படத்தின் 3 சூப்பர் ஹிட் பாடல்கள், அதிகாரப்பூர்வ ரிலீஸுக்கு முன்பே லீக் ஆகி இணைய தளத்தில் வெளியான விவகாரத்தில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இயக்குநர் ஷங்கர் சந்தேகப்படுகிறாராம்.ஏண்டா இந்தப் படத்தைத் தயாரித்தோம் என்று ஏவி.எம். சரவணன் நொந்து போகும் அளவுக்கு சிவாஜி பல தலைவலிகளைக் கொடுத்து வருகிறது.

படத்தின் ஸ்டில்கள் குண்டக்க மண்டக்க வெளியாகி முதலில் டென்ஷன் கொடுத்தது.அடுத்து படத்தின் விற்பனை தொடர்பாக சகட்டு மேனிக்குத் தகவல்கள் வெளியாகி சரவணனை டென்ஷன்படுத்தியது. இப்போது சிவாஜி படத்தின் 3 பாடல்கள் எம்.பி.3 வடிவில் வெளியாகி கலக்கி எடுத்துள்ளது. பாடல்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீஸாகும் முன்பே 3 பாடல்கள் வெளியாகி விட்டது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. யார் இதற்கு காரணம், ஹூ இஸ் தி பிளாக் ஷீப் என்ற கேள்வி ஏவி.எம். ஸ்டூடியோவுக்குள் முட்டி மோதி எக்கோ அடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ரஹ்மானும் அவரது உதவியாளர்களும்தான் பாடல் வெளியானதற்கு முக்கியக் காரணம் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளாராம். ஆனால் இதுகுறித்து ஷங்கரோ அல்லது சரவணனோ, ரஹ்மானிடம் எதுவும் பேசவில்லையாம். ஆனால் இந்த விவகாரம் குறித்து குற்றவாளி யார் என்பதைக் கண்டறியுமாறு சென்னை காவல்துறையை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. ரஹ்மான் மீது ஷங்கருக்கு சந்தேகம் கிளம்பியுள்ளது, திரையலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஜாக்கிரதையாக கையாள ஏவி.எம். நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். இல்லாவிட்டால் வேறு பாதையில் பிரச்சினை திசை மாறி விடுமோ என்று அது அஞ்சுகிறது. இன்னொரு கோணத்திலும் இந்த லீக் விவகாரம் அலசப்படுகிறது. அதாவது படத்தின் பாடல் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக ஏவி.எம். நிறுவனம் அறிவித்தவுடன், உலகளாவிய வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு ஆடியோ டிராக்குகளை அனுப்பி வைத்து விட்டனராம். எனவே அங்கிருந்தும் கூட பாடல்கள் லீக் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாம்.

படத்தின் பாடல்கள் முன்கூட்டியே திருட்டுத்தனமாக வெளியாகி விட்டது சிவாஜி யூனிட்டுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் படத்துக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்ற பயமும் தயாரிப்பாளர் தரப்பில் நிலவுகிறது. பாடல்கள் வெளியானது குறித்து ரஜினி கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இந்தப் பிரச்சினை தொடர்பாக இன்னொரு ஷாக் நியூஸ் இது.

கவிஞர் வைரமுத்துவை அமெரிக்காவிலிருந்து ஒருவர் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடம், நீங்கள் பூம்பாவை ஆம்பல் ஆம்பல், புன்னகையோ மையல் மையல் என எழுதியுள்ளீர்களே, அதன் அர்த்தம் என்ன, பாடல் வரிகள் ஆபாசத் தொணியில் இருக்கிறதே என்று கேட்டாராம். அவர் கூறியதைக் கேட்டதும் இந்த பாடல் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று வைரமுத்து ஷாக் ஆகி விட்டாராம். மொத்தத்தில், சிவாஜி பாடல் லீக் விவகாரம் கோலிவுட்டை பெரும் கலக்கு கலக்கி வருகிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home